மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் கமல்நாத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திடீரென பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர். இதனால், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 26-ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அன்று சபாநாயகர் அறிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை மனுவை விசாரித்த நீதிபதிகள், மார்ச் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று நள்ளிரவில் மீதமுள்ள 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.